articles

img

அமேசான் காடுகளைக் காப்பாற்ற உதவுமா செயற்கை நுண்ணறிவு

     புதிய கணினியியல் செயற்கை நுண்ணறிவுக் கருவி (AI tool) அமேசானின் மழைக்காடு களைக் காப்பாற்ற உதவுமா? காடுகள் அழிக்கப்படும் இடங்களை முன்கூட்டியே கண்டுபிடித்து மரம் வெட்டும் சட்டவிரோதக் கும்பலை தடுக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மார்ச் 2023இல் மட்டும் டிரையன்ஃபோடு ஜிங்கு (Triunfo doXingu) என்ற பகுதியில் 700 கால் பந்து விளையாட்டு மைதானங்களின் பரப்பளவுள்ள வனங்கள் அழிக்கப்பட்டன. அமேசானின் தென்கிழக்குப் பகுதியில் பாரா (Para) மாநிலத்தில் சூழல் பாது காப்புப் பகுதியில் (APA) அழிக்கப்பட்ட இதன் பரப்பு 16,000 சதுர கிலோமீட்டருக்கும் கூடுதலானது. இது உலகின் மிகப்பெரிய சூழல் பாதுகாப்புப் பகுதிகளில் ஒன்று. இப்பகுதியே மிக அதிக ஆபத்தை எதிர்நோக்கி யுள்ளது என்று புதிய கருவி முன்னெச்சரிக்கை செய்கிறது.

பிரிவிஸ் ஐ ஏ

     பிரிவிஸ் ஐ ஏ (PrievisIA) என்ற இந்த செயற்கை நுண்ணறிவு தளம் இமாசான் (Imazon) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் உரு வாக்கப்பட்டுள்ளது. வன அழிவு நிகழும் முன்பே அதை அறிய உதவும் இத்தகைய கருவி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே ஆய்வின் முக்கிய நோக்கமாக இருந்தது. 2023 இறுதிக்குள் டிரையன்போ பகுதியில் 271.52 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள காடுகள் அழிக்கப் பட வாய்ப்புள்ளது என்று இக்கணினியியல் கருவி முன்னெச்சரிக்கை செய்துள்ளது.

    இதில் 5 சதுர கி மீ பரப்பு காடுகள் கடந்த மார்ச்சில் அழிக்கப்பட்டுவிட்டன. அமேசானின் இப்பகுதி உலகில் வேறெங்கும் காணப் படாத பல அரிய உயிரினங்கள் வாழும் பகுதி. இது அழியும் ஆபத்தில் உள்ள வெள்ளைத்தாடை ஸ்பைடர் குரங்குகள் (White-cheeked spider monkey) மற்றும் ஆபத்தான நிலையில் இருக்கும் உயிரினங்களின் பட்டிய லில் உள்ள உலகின் மிகப்பெரிய கிளி இனமான ஹைய சிந்த் மக்காவ் (hyacinth macaw) மற்றும் ஜாகுவார் (Jaguar) போன்ற விலங்குகளின் வாழிடம்.

ஆனால் இந்த வனப்பரப்பு  ஆல்டமீரா (Altamira)மற்றும் சௌ பீலிக்ஸ் டு ஜிங்கு (Sao Felix do Xingu) என்ற இரண்டு நகராட்சிகளின் வழியாகக் கடந்து செல்கிறது. பிரேசிலின் சட்டங்கள் மூலம் ஜிங்கு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டி ருந்தாலும் தொடரும் மரங்களை வெட்டுதல், சுரங்கம் தோண்டுதல், நில அபகரிப்பு போன்ற சட்டவிரோதச் செயல்களால் காடுகள் அழிந்துகொண்டிருக்கின்றன. தரிசாக மாறிவருகின்றன. ஆனால் இப்புதிய கருவி இந்நிலையை மாற்றும் என்று நம்பப்படுகிறது. இமாசான் இப்பகுதியில் இருக்கும் அதிகாரிகளுடன் இணைந்து காடுகள் அழிக்கப்படுவதற்கு முன்பே அதைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அழியும் அமேசான்

     முன்பு எப்போதும் இல்லாத அளவு இப்போது அமேசானில் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக் கின்றன. கடந்த 2022இல் இருந்ததை விட 2023 மார்ச்சில் வன அழிவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரிவிஸ் ஏஐ கருவி முன்னெச்சரிக்கை செய்தது. 2023இன் முதல் கால்பகுதியில் 867 சதுர கி மீ காடுகள் அழிக்கப்பட்டன. இது அமேசானின் 16 ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது மிகப்பெரிய வன அழிவு.

     இமாசான் குழு அமேசானின் பாதுகாக்கப்பட்ட பகுதியின் தரவுகளை 2016ல் செயற்கைக்கோள் படங்களை வைத்து ஆராய்ந்துகொண்டிருந்தபோது கணினியியல் கருவியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. புதிய கருவி கண்டுபிடிக்கும் முன்பு வன அழிவு தொடர்பான முன்னெச்சரிக்கை செய்யும் நீண்டகால தரவு மாதிரிகளை கொண்ட தொழில்நுட்பம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இது வரும் பத்தாண்டுகளில் காடுகளுக்கு என்ன நிகழும் என்பது பற்றிய தகவல்களை மட்டுமே அளித்தது என்று  இமாசான் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த ஆய்வாளர் கார்லோஸ் சூசா ஜூனியர்  (Carlos Souza Jr) கூறுகிறார். இக்குழுவில் கார்லோஸ் தவிர ஒரு கணினிப் பொறியியலாளர், ஒரு புவி புள்ளி யியல் துறையின் ஆலோசகர் மற்றும் இரண்டு ஆய்வாளர் கள் இருந்தனர். புதிய மாதிரி ஒவ்வொரு ஆண்டும் அழிய வாய்ப்புள்ள வனப்பகுதியைப் பற்றிய தகவல் களை உடனுக்குடன் தரும். இந்த ஆய்வுக்கட்டுரை 2017 ஆகஸ்ட் மாத புள்ளியியல் (Journal Spatial Statistics) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டது.

புதிய தொழில்நுட்பம்

     புதிய தொழில்நுட்பத்தில் வரலாற்றுரீதியான தகவல்கள், புவி புள்ளியியல் விவரங்கள், அரசின் வருடாந்திர வன அழிவு பற்றிய தரவுகள் ஆகியவை ஆராயப்படுகின்றன. வன அழிவு சமீபகாலத்தில் நடந்திருந்தால் குற்றக் கும்பல் அப்போதும் அழிவு வேலையில் ஈடுபட்டுள்ளதைத் தெரிந்துகொள்ளலாம். கிய்லம்போலா (Quilombola) போன்ற ஆதிவாசி களால் காப்பாற்றப்படும் வனப்பரப்பு, நீர் வள்ம் உள்ள பகுதி மற்றும் இதர செழுமையான இடங்கள் போன்ற பலதரப்பட்ட விவரங்களை இக்கருவி ஆராய்கிறது. 

அழிவை ஊக்குவிக்கும் அம்சங்கள்

    மக்கள்தொகை அடர்த்தி, குடியிருப்புகள், கிராமப்புற சொத்துகள், சட்ட அங்கீகாரம் பெற்ற மற்றும் சட்டவிரோதமான மிதமிஞ்சிய சாலை உட்கட்டமைப்பு போன்ற வன அழிவை ஊக்குவிக்கும் அம்சங்களையும் இது ஆராய்கிறது. இவை வன அழிவிற்கான இரத்த நாளங்கள். தொழிற்துறையினர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட ஏதுவாக அமேசான் முழுவதும் அங்கீகரிக்கப்படாத சாலை வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இவை புதிய பகுதிகளில் காடுகள் அழிக்கப் படவும் காரணமாகின்றன.

    இந்த சாலைகளைக் கண்காணிப்பது வன அழிவு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்புப் பணிகளுக்கு மிக முக்கியமானவை. இமாசானின் தகவல்கள்படி 90% வன அழிப்பும் ஒரு சாலையின் 5.5 கி மீ தொலைவிற்குள் நடக்கிறது. 90% மரம் வெட்டுதல் 3 கி மீ தூரத்திற்குள் நடக்கிறது. 85% தீவிபத்துகளும் 5 கி மீ தூரத்திற்குள் நிகழ்கிறது. ஆய்வாளர்கள் ஆயிரக்கணக்கான செயற் கைக்கோள் படங்களை நுணுக்கமாக ஆராய்ந்து செழுமைமிக்க தாவரக்கூட்டம் (biome) அமைந்துள்ள இப்பகுதியில் புதிதாக ஏதேனும் சாலைகள் திடீரென்று முளைக்கின்றனவா என்று தேடிக் கண்டுபிடிக்கின்றனர்.

வரைபட விவரங்கள் பிரிவிஸ்

      கருவியின் உதவியுடன் இப்பணி ஒரு கணினி படிமுறை வடிவமைப்பு அமைப்பிடம் (algorithm) ஒப்படைக்கப்படுகிறது. தானியங்கி முறையில் படங்களை வேகமாக பகுத்தாய்வு செய்ய இது உதவுகிறது. இதனால் மேம்படுத்தப்பட்ட விவரங்கள் உடனுக்குடன் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இதுவரை திறன் மிக்க கணினித்தொகுப்பு தளம், சட்டவிரோத சாலையமைப்பு பற்றிய புதிய தகவல்கள் கிடைக்க வழியில்லாமல் இருந்த சூழ்நிலை மாறி இன்று இந்த புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவி இது பற்றிய தரவுகளை உடனுக்குடன் தருகிறது.

    இதன் மூலம் சட்டவிரோதக் கும்பல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வழி ஏற்பட்டுள்ளது. 2021இல் இமாசான் மைக்ரோசாஃப்ட் மற்றும் ஃபண்டோ வேல் (Fundo Vale) நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் இமாசான் படிமுறை வடிவமைப்பை இயக்கி சாலைகளின் வரைபடங்களை வரைய அவசியமான மேகக்கணினித் தொகுப்பு (cloud computing) வசதியைப் பெற்றது

உதவிக்கரம் நீட்டும் தொழில்நுட்பம்

    காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க தொழில் நுட்பமே உதவுகிறது என்று உலகளாவிய சூழல் கோட்பாடு முன்முயற்சி (Climate policy initiative) அமைப்பின் செயல் இயக்குநர் மற்றும் ரியோ டி ஜெனீரோ பெண்டிபிக்கல் கத்தோலிக்கப் பல்கலைக் கழக பேராசிரியர் ஜூலியானோ அசன்சௌ  கூறுகிறார். தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவி எண்ணற்ற செயல்திறன் ஆற்றல் பெற்றது. இதன் தொழில்நுட்பம் பயனரின் தேவைக்கேற்ப மாறுகிறது. இக்கருவியை மழைக்காடுகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அனைத்து நிலையிலும் இருக்கும் அரசு முகமைகள் மற்றும் அமேசான் வனப்பாது காப்புடன் நேரடித் தொடர்பில்லாத வங்கித்துறை, முதலீட்டுப்பிரிவு, இப்பிரதேசத்தில் உற்பத்தியாகும் பொருட்களை நுகரும் மக்கள் போன்றோர் பிரிவிஸ் கருவி தரும் தகவல்களைப் பயன்படுத்தலாம்.

வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு

    பொருளாதார மற்றும் சூழல் ரீதியில் சரியான தீர்மானங்களை எடுக்க இமாசான் பிரதேச அளவில் மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் குற்றங்கள் குறைந்து பாதுகாப்பு வலுப்படும். இழப்பு ஏற்பட்ட பின் அது பற்றி தகவல் தெரிந்து நடவடிக்கை எடுப்பதை விட குற்றம் நடைபெறும் முன்பே அதைப் பற்றி அறிந்து நடவடிக்கை எடுப்பது சிறந்தது. சூழல் குற்றங்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர இத்தொழில்நுட்பம் உதவும். ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட இழப்புகளை இனிமேலும் நடக்காமல் தடுக்கவே வழக்கறிஞர்கள் விரும்புகின்றனர் என்று பாரா வழக்கறிஞர் மற்றும் சூழல் ஆபரேஷன் ஆதரவு மையத்தின் ஒருங்கிணைப்பா ளர் ஜெசே காடோபிரிடோ பையர்ஸ் டாஸ் சாந்தோஸ் கூறுகிறார்.

     பிரிவிஸ் கருவியின் 85% முன்னெச்சரிக்கைகளும் அழிவு வேலைகள் வனத்தின் எல்லையை ஒட்டி நான்கு கி மீ தூரத்தில் நடப்பதை எடுத்துக்கூறுகிறது.  இக்கருவியின் பயன்பாடு குறித்து வாராந்திர கலந்தாலோசனைகள் வழக்கறிஞர்களுக்கும் இமாசான் நிபுணர்களுக்கும் இடையில் நடக்கிறது. இக்கருவி 2023இன் இரண்டாம் பகுதியுடன் முழு செயல்பாட்டிற்கு வரும் என்று நம்பப்படுகிறது.

    இக்கருவியின் உதவியுடன் வன அழிவிற்கு அதிகம் ஆளாகும் பகுதியில் குற்றம் செய்பவர்களை உடன் கண்டுபிடித்து  நடவடிக்கை எடுக்கமுடியும் என்று மேற்கு பிரேசில் ஏக்ரே (Acre) நகரில் இருக்கும் வழக்கறிஞர் ஆர்தர் செஸர் பினேரோ லெயிட் (Arthur Cezar pinheiro Leite) கூறுகிறார். காட்டில் என்ன நடக்கிறது என்பது இதன் மூலம் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தெரியும். இதை மீறி காடு அழிக்கப்பட்டால் குற்றவாளிகள் கண்டிப்புடன் தண்டிக்கப்படுவார்கள். உயர் ஆபத்துள்ளவற்றில் 49% பகுதிகளில் இருந்து மட்டுமே முன்னெச்சரிக்கைகள் வருகின்றன. இக்கருவியின் மாதிரியை மேம்படுத்தும் பணியில் இமாசான் ஆய்வா ளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இத்தொழில்0 நுட்பத்தின் உதவியுடன் காடுகள் அழிக்கப்படுவது நிறுத்தப்படும் நல்ல நாளுக்காக ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.